Thursday 5 May 2016

'இன்று நேற்று நாளை’ டைம் மெஷின் உருவானது இப்படித்தான்! #ஸ்பெஷல் படங்கள்

ன்று நேற்று நாளை. கடந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று. அதன் முக்கிய கான்செப்ட் டைம் டிராவல் என்பதால், ஹீரோவுக்கு இணையாக வருகிறது கால இயந்திரம்.
அதில் உட்கார்ந்துதான் விஷ்ணுவும், கருணாகரனும் கடந்த காலத்திற்குப் போய் காந்தியோடு செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். நாயகிக்கு பிறந்தநாள் பரிசாய், அந்த மெஷினைக் காண்பிக்கும் நாயகன், அதில் அவளை அமரவைத்து, அவள் பிறந்தநாளன்று கூட்டிக்கொண்டு போய், அவளுக்கு யாரும் தரமுடியாத ஸ்பெஷல் பரிசொன்றை அளிப்பான்.
செல்ஃபோன், லேப்டாப் போன்ற கேட்ஜெட்களென்றால் ஓகே.. இவ்வளவு பெரிய டைம் டிராவல் மெஷினை எப்படி தயார் செய்திருப்பார்கள்?
இயக்குநர் ரவிகுமாரைத் தொடர்பு கொண்டோம்; 
“சரிதான் நீங்க கேட்கறது. செல்ஃபோன், லேப்டாப் மாதிரி கேட்ஜெட்னா, பிரச்னையில்லை. டம்மியா இருந்தாக்கூட மக்கள் நம்பற மாதிரி பண்ணிடலாம். ஆனா இல்லாத ஒண்ணைக் காமிக்கணும். அதை நம்பவும் வைக்கணும்ங்கறது சவாலாத்தான் இருந்தது.
ரசிகர்கள், இதை டைம் மிஷின்னோ, இதுல உட்கார்ந்து டிராவல் பண்றாங்கன்னோ நம்பாம படம் பார்த்தா படத்தோட ஃபீலே அவுட் ஆகிடும்ங்கற ஆபத்து இருந்தது. என் மனசுல இருந்ததை ஒரு பேப்பர்ல வரைஞ்சேன். என் நண்பர்களும் சிலது வரைஞ்சாங்க.
ரெண்டு பேர்தான் இதை சாத்தியப்படுத்தினது. Phanthom Fx பிஜாய் அற்புதராஜ், ஆர்ட் டைரக்டர் விஜய் ஆதிநாதன். Panthom Fx கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட்கிட்ட நான் வரைஞ்ச படம் காமிச்சதும், அவரும் வரைஞ்சு குடுத்தார். டக்னு பிடிச்சுப் போச்சு”
"டைரக்டர் சொன்னதுமே வரைஞ்சு காமிச்சு ‘இப்படித்தானே?’ ன்னு கேட்டேன். அவருக்கு பிடிச்சிடுச்சு” என்கிறார் Phanthom FXன் பிஜாய் அற்புதராஜ். அவென்ஜர்ஸ் உட்பட நிறைய ஹாலிவுட் படங்களுக்கு அனிமேஷன் செய்த குழு இவர்களுடையது. தமிழில் புலி படத்தின் அனிமேஷன் இவர்கள் பங்குதான்.
‘இயக்குநர் காமிச்சதும் அதுக்கான அளவு முடிவுப் பண்ணினோம். நம்ப வைக்கறதுக்காகத்தான், அதுல சூட்கேஸ் மாடல் கொண்டு வந்து, மடிச்சா சூட்கேஸ் மாதிரி மாறுவதா கொண்டு வந்தோம். இன்னொண்ணு சில காட்சிகள்ல மூன்று பேர் உட்கார்ற மாதிரியெல்லாம் வர்றதால, அகலமும் அதுக்கு நம்பற மாதிரி இருக்க வேண்டி வந்ததுன்னு பல சவால்கள். கிட்டத்தட்ட 70 பேர் இதுக்காக வேலை செய்தார்கள்” என்றார் பிஜாய்.
தொடர்ந்தார் இயக்குநர் ரவிக்குமார். “பிஜாய் வரைஞ்சதைக் கொண்டுபோய் ஆர்ட் டைரக்டர் ஆதிநாதன்கிட்ட காமிச்சேன். சூதுகவ்வும், காக்கா முட்டை, எனக்குள் ஒருவன், காதலும் கடந்து போகும் படங்களுக்கு எல்லாம், இவர்தான் ஆர்ட் டைரக்டர். இப்ப செல்வராகவன் படத்துல வொர்க் பண்ணிட்டிருக்கார்.  
அவர் சொன்ன பாய்ண்ட்ஸ் யோசிக்க வெச்சது. டைம் மிஷனோட உயரம், கேமரா ஃப்ரேமுக்கு உள்ள இருக்கணும். கதாபாத்திரங்கள் அதுல, உட்காரும்போது அவங்க தலை நடுவுல தெரியணும். அப்பதான் ரசிகர்களுக்கு பார்க்கறப்ப நல்ல உணர்வு வரும். இப்படி சில மாற்றங்கள் சொல்லி, கடைசில ஸ்கெட்சுக்கும் நிஜத்துக்கும் நிறைய மாற்றம் கொண்டு வந்தாங்க.  மறுபடி அதை பிஜாய்கிட்ட காமிச்சு அதுக்கு தகுந்த மாதிரி 3டி அனிமேஷன்ஸ் தயார் பண்ணினோம்.
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலயும் யாரோ இருப்பாங்கன்னு சொல்ற மாதிரி, இந்த மிஷினுக்குப் பின்னாடி என்னோட உதவி இயக்குநர்கள் இருந்தாங்க. அதாவது.. நெஜமாவே இருந்தாங்க. யாராவது உட்கார்ந்தாலே மிஷின் ஆடும். அதுனால ஆடாம இருக்கறதுக்கு பின்னாடி யாராவது பிடிச்சுட்டே இருப்பாங்க.
ஆர்ட் டைரக்‌ஷன் டீமுக்குத்தான் சரியான வேலை. அஞ்சாறு பார்ட், டகடகன்னு கழட்டிடுவாங்க. மறுபடி மாட்டுவாங்க. படம் எடுத்து முடிஞ்சப்பறம் திரையில பார்க்கறப்ப எப்படி வரும்னு தெரியாது-ங்கற பயம் இருந்தது. ஆனாலும் நம்பிக்கையா பண்ணினாங்க.”
“நீங்களும், உங்க டீமும் அந்த மிஷினை, முதன்முதலா எப்பப் பார்த்தீங்க?”
“ஹீரோயின் பொறந்தநாளுக்கு, ஹீரோ கூட்டிகிட்டு வந்து டைம் மிஷினை காமிக்கற சீன் ஷூட் பண்ணின அன்னைக்கு எல்லாரும் பார்க்க வேண்டியது. ஆனா முழுசா ரெடி ஆகல. பாதிதான் ஆகிருந்தது. ‘நிச்சயமா வேணும்’னு கொண்டு வரச் சொல்லிட்டேன். பார்த்தா பாதிதான் இருந்தது. அரைகுறையா ஷூட் பண்ணிட்டு, முழுசா ரெடி ஆனப்பறம் அந்த வீட்டு ரூம் மாதிரி செட் போட்டு பாக்கிய முடிச்சோம்.
முழுசான்னா, ஷூட்டிங் ஆரம்பிச்சு, 20 நாள் கழிச்சு பார்த்தசாரதி லேபுக்குள்ள வெச்சுதான் அத மொத வாட்டி முழுசா பார்த்தாங்க. ஃபர்ஸ்ட் டைம் மிஷின் ஸ்பாட்ல வெச்சதும், விஷ்ணு, கருணாகரன்லாம் உட்கார்ந்து ஃபோட்டோ எடுத்துகிட்டாங்க. எல்லாருக்குமே ஒரு நம்பிக்கை வந்தது. எனக்கும் திருப்தியா இருந்தது”
”ஆர்யா, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், வில்லன்லாம் உட்கார்ந்த அந்த டைம் மெஷின்ல நீங்க உட்கார்ந்து பார்த்தீங்களா?

‘இதோ” ஃபோட்டோவக் காண்பித்துச் சொன்னார்: “உட்கார்ந்து ஃப்யூச்சருக்குப் போய்ப் பார்த்து ‘படம் ஹிட்’ன்னு தெரிஞ்சுகிட்டேன்ல!”
கெத்துதான்! அப்டியே நாங்களும் உட்கார்ந்து, உங்க அடுத்த படம் பத்தி தெரிஞ்சுக்கறோமே பாஸ்?  via  vikatan

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...