திரைப்பட இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சமுத்திரக்கனி சமீபத்தில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் அப்பா. இந்த திரைப்படம் ஈரோட்டில் 3 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. ரசிகர்களை கவர்ந்து உள்ள அப்பா திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை நேரில் சந்திக்கும் வகையில் சமுத்திரக்கனி மற்றும் அப்பா திரைப்பட நடிகர் குழுவினர் 8-ந்தேதி ஈரோடு வந்தனர்.
பின்னர் அவர்கள் திருப்பூர் புறப்பட்டு சென்றனர். முன்னதாக திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அப்பா திரைப்படத்தின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதைப்பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. படத்தை பார்ப்பதற்காக குழந்தைகளும், பெண்களும் கூட்டம் கூட்டமாக வருவதை பார்க்கிறேன். அவர்களுக்கான படத்தை எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் நான் இந்த படத்தை எடுத்தபோது பலருக்கும் நம்பிக்கை இல்லை. அப்பா என்ற பெயரே நன்றாக இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்பா என்ற வார்த்தையின் வலிமை தெரியும். எனது கதையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. எனவேதான் நான் வேறு தயாரிப்பாளரை தேடாமல் நானே நண்பர்கள் உதவியுடன் தயாரித்தேன்.
பொதுவான திரைப்படங்களில் இருப்பதுபோல குத்துப்பாட்டு, சண்டை காட்சிகள் இதில் இல்லை. இதுவே பெரிய குறையாக சிலர் கூறினார்கள். ஆனால் நான் இதுதான் என் படம் என்று கூறி எடுத்தேன். நான் கதை எழுதும்போதே எந்த இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கைத்தட்டுவார்கள் என்று நினைத்தேனோ, அந்த இடத்தில் கைத்தட்டினார்கள்.
எந்த இடத்தில் மனம் கலங்குவார்கள் என்று நினைத்தேனோ, அந்த இடத்தில் கலங்கினார்கள். காரணம் நான் ஒரு ரசிகனாக இருந்து இந்த கதையை எழுதினேன். வேறு யாரிடமும் இருந்து கதையை வாங்கவில்லை. தினசரி நான் பார்க்கும் சம்பவங்கள், என் மனதை பாதித்த சம்பவங்களையே கதையாக உருவாக்கினேன். 1040 மதிப்பெண்கள் வாங்கிய தைரிய லட்சுமி என்ற மாணவியின் தற்கொலை செய்தி என்னை வெகுவாக பாதித்தது. அதைத்தொடர்ந்து வந்த செய்திகளை மனதில் கொண்டு கதையை உருவாக்கினேன்.
இந்த படத்தில் நான் முதலில் கிளைமாக்ஸ் (உச்சக்கட்ட காட்சியை) தான் முதலில் எழுதினேன். அதன் பின்னர் தான் மற்ற காட்சிகள் உருவாக்கப்பட்டன. அதாவது கிளைமாக்சில் இருந்து தொடக்கத்தை நோக்கி எழுதினேன்.
என்னை பொறுத்தவரை இந்த சமூகத்தை உடனடியாக மாற்ற முடியாது என்பது தெரியும். ஊழல் நிறைந்த இந்த சமூகத்தில் உடனடி மாற்றம் என்பது நடக்காது. ஆனால் அடுத்த தலைமுறைக்கு நாம் சிலவற்றை கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே எனது கதைகள் அடுத்த தலைமுறைக்கானதாகவே இருக்கும். கற்பனை இல்லாத நிஜமான கதையை கொடுத்த கதாசிரியனாக இந்த படத்தில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன்.
இவ்வாறு திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி கூறினார்.
பேட்டியின்போது ஈரோட்டை சேர்ந்த நடிகர் நாடோடிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் அப்பா படத்தின் கலைஞர்கள் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment